×

கண்மாய், குளங்கள் வறண்டதால் விஸ்வரூபம் எடுக்கும் குடிநீர் தட்டுப்பாடு காலிக்குடத்துடன் அலையும் கிராமமக்கள்

சிவகங்கை, ஏப்.5: சிவகங்கை மாவட்டத்தில் குளங்கள், கண்மாய்கள் வறண்டு காணப்படுவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றிய கண்மாய்கள் 4 ஆயிரத்து 871, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 968 கண்மாய்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்கள், பேரூராட்சிகளில் குளத்து நீரே குடிநீராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குளிப்பது உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும் குளம் மற்றும் கண்மாய் நீரே பயன்படுத்தப்படும். ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் அனைத்து நீர் நிலைகளும் நிறைந்து காணப்படும். நவம்பரில் மழை பெய்வது முடிவடைந்து மீண்டும் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மட்டுமே மழை தொடங்கும் என்பதால் குளங்கள், கண்மாய்களில் இருக்கும் நீர் ஆறு மாத தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். கடந்த 2017ம் ஆண்டில் 976.6 மி.மீ மழை பதிவானது. 2018ம் ஆண்டில் 924.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் சராசரி மழையை விட கூடுதலாக 20 மி.மீ மழை பெய்துள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டுகளில் நிலவிய கடும் வறட்சி, கடந்த ஆண்டு அடித்த வெயிலால் இருந்த நீரும் விரைவாகவே வற்றியது.

இதனால் தற்போது குளங்கள், கண்மாய்கள் முழுமையாக வறண்டு காணப்படுகிறது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர், இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, திருப்புவனம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காளையார்கோவில், சிவகங்கை, இளையான்குடி பகுதிகளில் ஆற்றில் பள்ளம் தோண்டி ஊற்று ஊரும் வரை பல மணி நேரம் காத்திருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர். உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய்(போர்வெல்) சிறு மின் விசை பம்பு அமைக்கப்படுகிறது. ஆனால் இந்த நீரை யாரும் குடிநீருக்கு பயன்படுத்த முடியாது. கேன் குடிநீரும் நகரங்களுக்கு சென்று வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மழை பெய்தால் மட்டுமே குடிநீர் என்ற நிலை மாவட்டம் முழுவதும் நிலவி வருகிறது. இளையான்குடி பகுதி கிராமத்தினர் கூறுகையில், உள்ளாட்சி சார்பில் அமைக்கப்படும் ஆழ்குழாய் நீர் தொட்டிகள் உப்பு அல்லது உவர்ப்பாக குடிநீராக பயன்படுத்தும் நிலையில் இல்லை.

மேலும் இந்த நீரை சுத்திகரிக்காமல் நேரடியாக குடிநீராக பயன்படுத்தினால் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் யாரும் இந்த நீரை குடிப்பது இல்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் கடும் பாதிப்படைந்து வருகிறோம்.
குடிநீர் பாதிப்பு உள்ள கிராமங்களில் அரசு சார்பில் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வது கிடையாது. ஏன் இவ்வாறு செய்கின்றனர் என தெரியவில்லை. ஆழ்குழாயுடன் நிலையான சுத்திகரிப்பு உபகரணங்களும் அமைக்க வேண்டும். மாவட்டத்தில் சில பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அனை த்து ஊராட்சி, பேரூராட்சியையும் இணைக்க வேண்டும். ஆண்டுதோறும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இம்மாவட்டத்திற்கென புதிய குடிநீர் திட்டம் உருவாக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களில் லாரி மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED பிளஸ் 2 பொதுத்தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சிறப்பிடம்